பெண் என்பவள் பூமாதேவி...
மகனை ஈன்றெடுப்பதில் தோல்வியுற்று...
நலிந்து கிடக்கிறாள்
"பெண் குழந்தைகளை ஈன்றவள்"
ஆண்மை குறைவானவனை மணந்து...
அரச மரத்தில் தொட்டில் கட்டுகிறாள்...
"மலடி"
மங்கல நிகழ்வுகளில் மேடையில் நிற்கத் தயங்குகிறாள்...
"விதவை"
வயிற்றுப் பசிக்கு ஆண்களின் காமத்தால் வாழ்ந்தவள்...
"விபச்சாரி"
கருத்தடை அறுவை சிகிச்சைக்கு
கணவனை அனுமதிக்காமல்...
தன்னை உட்படுத்திக் கொள்கிறாள்...
"வம்ச தர்மம் காப்பவள்"
சீர்கேட்கும் புகுந்த வீட்டிற்கும்...
கொடுக்க மறுக்கும் தாய் வீட்டிற்கும்...
நடுவே நிற்கிறாள்...
"வாழாவெட்டி"
குடிகாரக் கணவனிடம் அடிபட்டு மிதிபட்டாலும்...
தியாகத்தின் புனிதம் காக்கிறாள்...
"பத்தினி"
வீட்டின் அக்கினி மூலையில் தினமும் தீக்குளிக்கிறாள்...
கல்வியில் சிறந்து விளங்கிய
"இல்லத்தரசி"
கணவன் வஞ்சித்து கை விட்ட பிறகு...
வேறு துணையோடு வாழுகிறாள்...
"நடத்தை கெட்டவள்"
தடைகளைத் தாண்டி வேற்று சாதி காதலனை மணந்ததால்...
ஒதுக்கப்படுகிறாள்...
"ஓடுகாலி"
எத்தனைப் புரட்சிகள் வெடித்தாலும்...
இத்தனைப் பெண்களையும் உயிரோடு விழுங்கும் பூமி கொக்கரிக்கிறது...
"பெண் என்பவள் பூமாதேவி..."
Comments
Post a Comment